சமச்சீர் கல்வி ஆய்வுக் குழு உறுப்பினர்களின் கருத்துக்களை தனித் தனியாக தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைத் தனித் தனியாக தாக்கல் செய்ய வேணடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு ஆய்வுக் குழுவை அமைத்து ஆராய்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதை சமர்ப்பித்து அதை உயர்நீதிமன்றம் விசாரித்து உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்பபடி தமிழக அரசு தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழு 4 முறை கூடிப் பேசி, ஆய்வறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. தற்போது அறிக்கை மீது விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 7ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி மனு செய்த பண்ருட்டியைச் சேர்ந்த பெற்றோரான சேஷாசலம் சார்பில் வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் வாதாடினார்.
அவர் கூறுகையில்,
முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போதைய அரசில் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருப்பவர் சமச்சீர் கல்வித் திட்டம் சட்ட விரோதமானது என்று கூறுகிறார்.
சமச்சீர் கல்வித் திட்டமே சட்ட விரோதமானது என்று கூறும் அதே அதிகாரி, அந்தத் திட்டத்தைப் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் ஒரு உறுப்பினராக செயல்பட்டுள்ளார். திட்டமே சட்ட விரோதம் என்று கூறியவரிடம் இருந்து நடுநிலையான கருத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
இந்த நிபுணர் குழுவின் கூட்டம் 4 முறைதான் நடந்துள்ளது. ஜூன் 17-ம் தேதி நடந்த முதல் நாள் கூட்டத்தில் நிபுணர் குழுவின் பணி என்ன என்பது பற்றி மட்டுமே பேசப்பட்டுள்ளது. கடைசி நாள் கூட்டத்தில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இடையில் நடந்த இரண்டு கூட்டங்களில் மட்டுமே சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களை ஆராய்வதற்கு நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு சுமார் 15 மணி நேர அவகாசம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய கால ஆய்வின் மூலம் சமச்சீர் கல்வி பாடநூல்கள் தரமற்றது என்ற முடிவுக்கு நிபுணர் குழுவால் எவ்வாறு வர முடிந்தது?
உண்மையில், நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் முழு ஈடுபாட்டோடு ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படவில்லை.
அதிகாரிகள் தயாரித்த அறிக்கையில் நிபுணர் குழு உறுப்பினர்கள் வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அதன் உறுப்பினர்களுக்கே காட்டப்படவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் ஒரு உத்தரவைப் பிறப்பித்தனர். அதில், சமச்சீர் கல்வி தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை தொடர்ந்து விசாரணை நடைபெறும். அப்போது, நிபுணர் குழுக் கூட்டத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யும் முன்னும், வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் நிபுணர் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தெரிவித்தக் கருத்துகளை இந்த நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், நிபுணர் குழுவின் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து குறிப்புகளையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.












Click it and Unblock the Notifications