ஓய்வு பெற்ற பின்னரே பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்-ராகுல்

இது குறித்து புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
நாட்டையும், அரசையும் வழி நடத்தும் பிரதமரை பதவியில் இருக்கையிலேயே லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது. பதவியில் இருந்து விலகிய பிறகு விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரலாம்.
ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் தகுதிகளை முன்னேற்றுவது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியேற்பு
முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப் குமார்(62) இன்று ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சரவை செயலாளர் அஜித் சேத், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதீப் குமார் ஹரியானாவைச் சேர்ந்தவர். 1972-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார்.
இதற்கு முன்பு தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்து வந்த பி.ஜே. தாமஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்ததால் அவரது நியமனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
தாமஸ் பதவியில் நீடிக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தாமஸ் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது பதவி தானாகவே காலியானது. இதைத் தொடர்ந்து தான் தற்போது புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications