பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டன: அத்வானி

Subscribe to Oneindia Tamil

Advani
மும்பை: பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதைத் தான் மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம் எடுத்துக் காட்டுகிறது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.

மும்பையில் நேற்று குண்டுகள் வெடித்த இடங்களை அத்வானி இன்று பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,

இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தானால் மறைமுகமாகத் தொடுக்கப்படும் போர்.

பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கொள்கைகள் தவறானவை, அவை தோல்வியடைந்துவிட்டன என்பதைத் தான் இந்த மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும். தொடர்ந்து இதே போன்ற அலட்சியப் போக்கை கடைபிடித்தால், தீவிரவாதத் தாக்குதல்கள் நிற்கப் போவதில்லை.

தீவிரவாததத்துக்கு உதவும் கட்டமைப்பை பாகிஸ்தான் உடைத்தால் மட்டுமே அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்கிறது.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இந்தியாவைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதை நடத்துவது பாகிஸ்தான் தான்.

பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையை இந்தியா பின்பற்ற வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக பாஜக ஆட்சியில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்தியாவுக்குள் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய இலக்காக மும்பை உள்ளது. இந்தத் தாக்குதல்கள் உளவுத் துறையின் தோல்வி அல்ல. அரசின் கொள்கைதான் தோல்வி அடைந்துள்ளது என்றார் அத்வானி.

இந்து முன்னணி கண்டனம்:

இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மும்பையில் நேற்று மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திக்கின்றனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் உயிரிழக்கவும், பொருட்சேதமும் ஏற்பட காரணமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

பயங்கவாதிகள் மேல் நடவடிக்கை எடுக்காததால் பயங்கரவாதிகள் இதுபோன்ற மோசமான சதிச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உளவுத் துறை, புலானய்வு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி, கடும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே தொடர்ந்து மும்பை நகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமும், நக்ஸல், மாவோயிஸ்ட் இடதுசாரி பயங்கரவாதிகளிடமும் மத்திய அரசு மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்பதாலேயே இத்தகைய மோசமான விளைவுகளை நாடு சந்திக்க வேண்டியுள்ளது.

பயங்கரவாதத்தைக் கண்டித்து வருகிற 17ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுக்கிறது. இதற்கு நடுநிலையாளர்களும், பொது மக்களும் ஆதரவு அளித்திட வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+