பத்மநாபசாமி கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு : 24 மணி நேரமும் கண்காணிப்பு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட வேண்டும் என்று கேரள மாநில போலீசார் கேரள அரசிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளில் இருந்து 5 லட்சம் கோடி மதிப்பிலான தங்க பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கேரள காவல்துறை அறிக்கை தயாரித்துள்ளது. ஏடிஜிபி வேணுகோபால் நாயர், கூடுதல் தலைமை செயலாளர் ஜெயகுமாரிடம் அந்த அறிக்கையை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான விபரங்களை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட உள்ளது.
ஏடிஜிபி வேணுகோபல் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பத்மநாபசாமி கோவிலும், சுற்று வட்டார பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். கமண்டோ படையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கோயில் பாதுகாப்பு பொறுப்பை கேரள போலீசிடம் மட்டுமே வழங்க வேண்டும். வேறு ஏஜென்சிகளிடம் அளிக்கக்கூடாது. மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதுடன் 24 மணி நேரமும் செயல்படுகின்ற கண்ட்ரோல் ரூம் ஏற்படுத்த வேண்டும்.
பல்வேறு விதமான காமிராக்கள், ஓளி, ஒலி, நிழல்கள் போன்றவற்றை கூட கண்டறிந்து அலாரம் ஓலிக்க செய்யும் வகையில் உள்ள தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். லேசர் சென்சர், மெட்டர் டிடெக்டர், ஸ்கானர்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட வேண்டும். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கோயிலின் வெளியே தொடர்ந்து போலீஸ் ரோந்து நடத்தப்பட வேண்டும். கோயில் பகுதியில் வருகின்ற வாகனங்கள் சோதித்தல், பார்க்கிங் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்படுத்துதல் வேண்டும். கோயிலின் முன்பகுதியில் வியாபாரம் செய்வது பாதுகாப்பு விசயத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
எனவே நடைபாதை வியாபாரிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கோயில் சுற்று வட்டார பகுதியில் கட்டுமான பணிகள் போலீசாருக்கு தெரிவிக்கமால் நடத்த கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications