சென்னையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல்
சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் காலனியைசே சேர்ந்தவர் முகமது ரபி. தள்ளு வண்டியில் சிக்கன் பக்கோடா விற்பவர். அவரது மனைவி சாய்ராபானு. அவர்களுக்கு சப்னம் பானு(2) என்கிற மகளும், ஆரிப்பாஷா(10) என்ற மகனும் உள்ளனர்.
முகமது ரபி நேற்று மாலை வழக்கம் போல பக்கோடா விற்கச் சென்றார். அவருடன் சாய்ராபானுவும் சென்றுவிட்டார். குழந்தைகளை முகமது ரபியின் தாய் பானுபீவியிடம் விட்டுவிட்டுச் சென்றனர்.
இரவானதும் ஆரிப்பாஷா தூங்கிவிட்டான். அப்போது பானுபீவி முகமது ரபியிடம் பார்சல் கட்ட பேப்பர் கொடுக்கச் சென்றார். திரும்பி வந்தபோது தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை. உடனே முகமது ரபியிடம் தெரிவித்தார். அவர் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
ரபியின் வீட்டுப் பக்கம் அடிக்கடி சுற்றும் பிச்சைக்காரனைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அதனால் பலனில்லை. இதையடுத்து போலீசார் குழந்தையைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications