திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் மகனைப் பறிகொடுத்த தந்தையின் கண்ணீர்
மும்பை: மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் தனது மகனை பறி கொடுத்து விட்டு பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது ஒரு அப்பாவிக் குடும்பம்.
எனது மகன் என்ன பாவம் செய்தான். திருமணமாகி 2 மாதங்கள்தானே ஆகிறது. அதற்குள் அவனைக் கொன்று விட்டார்களே என்று கண்ணீர் மல்கக் கேட்கிறார், ஜவேரி பஜார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த அஸ்கர் முகம்மது என்ற 27 வயது இளைஞரின் தந்தை பயஸ் முகம்மது தபோலி.
ஜவேரி பஜார் பகுதியில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் வைர நகை தொழிலி்ல் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்தான். அவர்களில் அஸ்கரும் ஒருவர்.
அஸ்கர் குறித்து அவரது தந்தை பயஸ் கூறுகையில், எனது மகனுக்கு கல்யாணமாகி 2 மாதங்கள்தான் ஆகிறது. குண்டுவெடிப்புச் சம்பவத்தில் அவன் காயமடைந்தான் என்ற தகவல் வந்தபோது நான் வீட்டில் இருந்தேன்.
உடனடியாக சைபி மருத்துவமனைக்குச் செல்ல ஆட்டோ, பஸ் தேடினேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு அங்கு ஓடினேன். ஆனால் அதற்குள் எனது மகன் இறந்து விட்டதாக அவனது நண்பர்கள் கூறினார்கள். நான் அதிர்ந்து போய் விட்டேன்.
எனது வீட்டில் அவன் ஒருவன்தான் உழைத்து வந்தான். இன்று அவன் இல்லை. எனது மகிழ்ச்சியெல்லாம் துக்கமாக மாறி விட்டது என்றார் கண்ணீர் மல்க.
பயஸ் முகம்மது, மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு நோயாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து வரும் சமூக சேவையில் ஈடுபட்டிருப்பவராம். இதற்காக கித்மத் அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவி அவர் செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications