காமராஜர் பிறந்தநாள்: கண்டுகொள்ளாத அதிமுக அரசு- கருணாநிதி
சென்னை: காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆசிரியர்கள் கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாட வேண்டும் என்று திமுகவினருக்கு அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007-2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காமராஜர் பிறந்த நாளான ஜுலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் என்ற பெயரால் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டு, அவ்வாறு தொடர்ந்து வருகின்ற அரசுகளும் கொண்டாட வேண்டுமென்பதற்காக அந்த அறிவிப்பினை சட்டமாகவே இயற்றினோம். கடந்த ஆண்டு கூட, சென்னையில் காமராஜர் பிறந்த நாளை-கல்வி வளர்ச்சி நாள் என்ற பெயரில் அரசின் சார்பில் பெருவிழாவாக எடுத்து, அந்த விழாவிலே நானே கலந்து கொண்டேன்.
அந்த விழாவில் மத்திய மந்திரியாக இருந்த தயாநிதி மாறன், மத்திய இணை மந்திரியாக இருந்த கே.வி.தங்கபாலு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அரசின் சார்பில் அமைச்சர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மட்டுமே விளம்பரமாக வந்துள்ளது.
எனவே திமுகவின் சார்பில் கழகத் தோழர்களும், முன்னணியினரும் ஆங்காங்கு காமராஜரின் சிலைகளுக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலைகளை அணிவிப்பதோடு, ஆசிரியப் பெருமக்கள் கல்வி வளர்ச்சி நாளாகவும் அதனைக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications