ஜெ.வுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் விடுத்த தமிழ் பேராசிரியர் கைது
சென்னை: எஸ்.எம்.எஸ். மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 11-ம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி கோட்டைக்கு வருகையில் முதல்வர் ஜெயலலிதாவை குண்டு வைத்து தகர்ப்போம் என்று எழுதியிருந்தது. இதைப் பார்த்த போலீசார் திடுக்கிட்டனர்.
உடனே இது குறித்து கமிஷனர் திரிபாதிக்கு தகவல் கொடுத்தனர். அவர் இது குறி்த்து விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கவுதம் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
எஸ்.எம்.எஸ். வந்த எண்ணை வைத்து விசாரிக்கத் துவங்கினர். அப்போது அந்த சிம் கார்டு ஒரு கல்லூரி முதல்வரின் பெயரில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த முதல்வரை அணுகி விசாரித்ததில் அவர் பெயரில் வேறு யாரோ சிம் கார்டை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடு்த்து கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு கல்லூரி பேராசிரியர் தான் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது. அவர் பெயர் யோகேஸ்வரன்(36). அவர் தனது மனைவியைப் பிரிந்து அச்சரப்பாக்கம் மேற்குமாட வீதியில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலையில் அவர் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.
விசாரணையில் அவர் கூறியதாவது,
நான் தற்போது வேலையில் இல்லை. அதற்கு காரணம் அந்த கல்லூரி முதல்வர் தான். அவரை எப்படியாவது போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனே அவர் பெயரில் சிம் கார்டு வாங்கி, கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பினேன் என்றார்.
இதையடுத்து அவர் மீது கொலைமிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
யோகேஸ்வரன் எம்.ஏ., எம்.பில். பட்டம் படித்துவிட்டு தமிழ் பேராசிரியராக இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications