மும்பையில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணம் மனித வெடிகுண்டா?

மொத்தம் மூன்று இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அதில் ஜாவேரி பஜாரும் ஒன்று. இங்கு குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே ஒரு சிதறிய உடல் கிடைத்தது. உடலில் வயர்களும் சுற்றப்பட்டுக் கிடந்தது. தலையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு மனித வெடிகுண்டாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது உடலுக்குள் வயர்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், போலீஸாரை வரவழைத்து அதைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக மனித வெடிகுண்டாக வரும் நபர் உடலுக்கு வெளியேதான் குண்டைக் கட்டி வந்து வெடிக்கச் செய்வார். ஆனால் இந்த நபரின் உடலிலோ உள்ளுக்குள் வயர்கள் இருப்பதைப் பார்த்து போலீஸாரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வச் செய்தியும் வரவில்லை.
இருப்பினும் இது உண்மையாக இருந்தால் இப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். ஆனால் அப்போது மனித வெடிகுண்டாக வந்த பெண்ணான தனு, உடலைச் சுற்றித்தான் வெடிகுண்டை கட்டியிருந்தார்.
மனித வெடிகுண்டு குறித்து உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறுகையில், என்எஸ்ஜி இயக்குநர் ஜெனரல் இதுகுறித்து என்னிடம் தெரிவித்துள்ளார். ஒரு உடலுக்குள் வயர்கள் பொருத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த உடல், வெடிகுண்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கிடந்தது. இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவடைந்த பின்னரே அந்த உடல் யாருடையது என்பது தெரிய வரும் என்றார்.
மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ராகேஷ் மரியா கூறுகையில், மனித வெடிகுண்டுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது என்றார்.
ஆனால் மனித வெடிகுண்டுத் தாக்குதலாக இது இருக்கலாமோ என்ற சந்தேகம் பெரிய அளவில் வலுத்துள்ளது.
ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதா?
இதற்கிடையே, அந்த மனித வெடிகுண்டு நபரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
குண்டுவெடிப்பின்போது செல்போன் அலாரம் பயன்படுத்தப்பட்டிருப்பது இதை வலுப்படுத்துவதாக உள்ளது.
கால் மணி நேரம் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை-சவான்
இதற்கிடையே, குண்டுவெடிப்பு நடந்த கால் மணி நேரத்தில் தன்னால்யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. குறிப்பாக டிஜிபியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
முதல் 15 நிமிடங்கள் தொலைத்தொடர்பு முற்றிலும் தடைபட்டிருந்தது. இது அதிர்ச்சியானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. செல்போன் நெட்வொர்க்குகள் 15 நிமிடங்கள் செயலிழந்திருந்தன. அதை மேம்படுத்துவது அவசியம். என்னால் டிஜிபியைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.
குண்டுவெடிப்புகளையடுத்து மக்கள் கோபமடைந்தது நியாயமானதுதான். மீண்டும் மீண்டும் குண்டுவெடிப்புகள் நிகழ்வதை அரசால் ஏன் தடுக்க முடியவில்லை என்று பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர்.
ஆனால் 2008 பயங்கரவாதத் தாக்குதலின்போது இருந்ததைவிட இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. 100 சதவீத பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று கூறுவது அதிகப்படியானதாக இருக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications