ஒவ்வொரு தீவிரவாத தாக்குதல்களையும் தடுப்பது இயலாத காரியம்- ராகுல் பேச்சு
புவனேஸ்வர்: நாட்டில் நடைபெறும் 99 சதவீத தீவிரவாதத் தாக்குதல்கள் பாதுகாப்புப் படையினர் தடுத்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால், அத்தனை தீவிரவாதத் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவது என்பது இயலாத காரியம், மிகவும் கடினமான காரியம் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
எதையும் வித்தியாசமாக பேசுவதே ராகுல் காந்தியின் சமீப கால ஸ்டைலாகியுள்ளது. நாட்டில் உள்ள நதிகளை இணைத்து, நாட்டை பசுமையாக்க நினைப்பது வீண் வேலை என்று முன்பு பேசினார். இதற்கு கடும் கண்டனங்களை அவர் சம்பாதித்தார்.
இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது என்பது இயலாத காரியம் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 99 சதவீத தீவிரவாதத்தாக்குதல்களை தீவிரக் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையினரின் சீரிய பணிகள் மூலம் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி விடுகின்றனர்.
இருப்பினும் ஒவ்வொரு தாக்குதலையும் தடுப்பது என்பது இயலாத காரியம், மிகவும் கடினமானதும் கூட.
முன்பெல்லாம் தீவிரவாதத் தாக்குதலால் நாம் நிலைகுலைந்து போனோம். இப்போது சமாளிக்கப் பழகி விட்டோம். மக்கள் மிகச் சிறந்த முறையில் சமாளி்த்து விடுகிறார்கள். நம்மிடையே ஒற்றுமை அதிகரித்துள்ளது.
நாம் ஒற்றுமையுடன் இருந்து தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடினால் 100 சதவீத தீவிரவாத தாக்குதல்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
அடிமட்ட அளவிலிருந்து தீவிரவாதத்திற்கு எதிரான மனோபாவம் மக்களுக்கு வர வேண்டும். வறுமை ஒழிப்பு, கல்வியறிவை அதிகரிப்பது உள்ளிட்டவை மூலம் இதை சாதிக்க முடியும்.
அமெரிக்காவில் நியூயார்க் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். அதேசமயம், ஆப்கானிஸ்தான் உள்ளி நாடுகளில் தொடர்ந்து அமெரிக்கர்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர் என்றார் ராகுல்.












Click it and Unblock the Notifications