திருச்சியில் ரூ. 1.5 கோடி நிலத்தை அபேஸ் செய்த திமுக நிர்வாகி கைது
திருச்சி: திருச்சியில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பகுதி செயலாளர் மதிவாணனை போலீசார் கைது செய்தனர். நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்தனர்.
திருச்சி திருவானைக்காவல், சக்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (50). மலைக்கோட்டையில் சி.டி. கடை ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு ஹேமமாலினி (45) என்ற மனைவியும், 1 மகளும் உள்ளனர்.
திருச்சி சிந்தாமணி, கலைஞர் அறிவாலயம செல்லும் சாலையில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்பிளக்ஸி்ல் அவருக்கு சொந்தமாக ஒரு கடை உள்ளது.
இந்நிலையில் ஜெயசீலன் மலைக்கோட்டை பகுதி திமுக செலாளர் மதிவாணன்(40) என்பவரிடம் ரூ. 22 லட்சமும், வங்கியில் ரூ. 50 லட்சமும் கடன் வாங்கினார். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் ஜெயசீலன் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது மனைவி ஹேமமாலினி தனது பிளஸ் 1 படிக்கும் மகளுடன் தனியாக தவித்தார். கடன் தொல்லை அதிகரித்த நேரத்தில் மதிவாணன் ஹேமமாலினியிடம் சென்று அந்த கடையை ரூ. ரூ.76 லட்சத்து 62 ஆயிரத்திற்கு வாங்கிக் கொள்வதாகும், தனக்கு கொடுக்க வேண்டிய தொகையை எடுத்துக் கொண்டு, வங்கிக் கடனையும் அடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது கடந்த 2007-ம் ஆண்டு நவம்பரில் நடந்தது.
கஷ்டப்படும் வேளையில் ஆறுதலாய் பேசிய மதிவாணனை நம்பி ஹேமமாலினி கிரய ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் மதிவாணனோ 3 ஆண்டுகளாகியும் வங்கிக் கடனை அடைக்கவில்லை. இதையடுத்து ஹேமமாலினி மதிவாணனிடம் சென்று பணத்தை கொடுங்கள், இல்லையெனில் கடையை காலி செய்யுங்கள் என்று கூறி்யுள்ளார்.
அதற்கு மதிவாணன் கடையை காலி செய்ய மறுத்ததோடு ஹேமமாலினிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ஹேமமாலினி போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்தி் போலீசார் மதிவாணனை இன்று காலை கைது செய்தனர். நிலத்தை மீட்டு ஹேமமாலினியிடம் ஒப்படைத்தனர். மதிவாணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஹேமமாலினி கடையின் தற்போதைய மதிப்பு ரூ. 1.5 கோடி ஆகும். அது தெரியாமல் அவர் ரூ.76 லட்சத்துக்கு 62 ஆயிரத்துக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications