சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்கப்பட்டது
டெல்லி: மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
அவரது ராஜினாமா கடிதம் ஐந்து நாள் இழுபறிக்குப் பின்னர் நேற்று ஏற்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில்,கபில் சிபல் தொடர்பான புகாரில், சுப்ரீம் கோர்ட்டில் வாதாட தனியார் வக்கீலை சட்ட அமைச்சகமும், தொலைத் தொடர்புத்துறை அமைச்சகமும் நியமித்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த கோபால் சுப்ரமணியம் உடனடியாகதனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து குடியரசுத் தலைவரை அதிரடியாக நேரில் சந்தித்து விளக்கினார்.
அவர் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் கோபால் சுப்ரமணியம். எனது அலுவலகத்திற்கென்று கெளரவம், மரியாதை உள்ளது. அதைக் காக்கவே நான் விலகினேன் என்று கூறி விட்டார்.
இந்த விவகாரத்தால் மத்திய அரசுக்குப் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. இந்த நிலையை ஏற்படுத்தியதற்காக சட்ட அமைச்சர் மொய்லியை பிரதமர் மன்மோகன் சிங் அதிரடியாக இடமாற்றம் செய்தார். புதிய சட்ட அமைச்சராக சல்மான் குர்ஷித் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கோபால் சுப்ரமணியத்தின் ராஜினாமாவை ஏற்பது என்ற முடிவை சட்ட அமைச்சகம் ஏற்றது. இந்த முடிவை சல்மான் குர்ஷித், கோபால் சுப்ரமணியத்திற்குத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications