ராஜ்ய சபை உறுப்பினராக ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்வு

நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபையில் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்த கே.வி.ராமலிங்கம், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழக அமைச்சர் ஆனார்.
இதைத்தொடர்ந்து தனது எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். காலியான அந்த இடத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ஆ.வில்லியம் ரபி பெர்னார்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்த டாக்டர் கே.பத்மராஜன், நாகர்கோவிலைச் சேர்ந்த நாகூர் மீரான் பீர் முகமது ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அ.தி.மு.க. வேட்பாளர் ரபி பெர்னார்ட் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை சட்டப்பேரவை செயலாளரும், மாநிலங்களவை தேர்தல் அதிகாரியுமான அ.மு.பி.ஜமாலுதீன் கோட்டையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை ரபி பெர்னாட்டிடம், தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் வழங்கினார். இதைத்தொடர்ந்து மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரபி பெர்னார்ட்டுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மேல்சபை தேர்தல் பார்வையாளருமான பிரவீண்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜெயலலிதாவிடம் ஆசி
அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை ரபி பெர்னார்ட் நேரில் சந்தித்து, தான் டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை காண்பித்து ஆசி பெற்றார்.
'என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்'
பின்னர் ரபி பெர்னார்ட் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, "ஒரு பத்திரிகையாளனாக வாழ்க்கையை ஆரம்பித்த என்னை, நாடாளுமன்ற உறுப்பினராக்கியதற்கு முதல்வருக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். என்மீது அவர் வைத்திருக்கும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications