ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில் புதிய கல்லூரிகள்-ஜெ. நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நாளை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார். இதில் அவரது ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரியும் அடக்கமாகும்.
இவை அனைத்தும் அரசுக் கல்லூரிகள் கிடையாது. மாறாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளாக இவை செயல்படும். இவற்றின் நிர்வாகம் உள்ளிட்டவற்றையும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை பார்த்துக் கொள்ளும்.
கடந்த அதிமுக ஆட்சியின்போதும் இதேபோல தேனியில் ஒரு கல்லூரியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தற்போது மீண்டும் அந்தத் திட்டத்தை அவர் முடுக்கி விட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் நெம்மேலியில் ஒரு கல்லூரி தொடங்கப்படுகிறது. அதேபோல பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் நாகலாபுரம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் அரூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சுழி ஆகிய இடங்களில் மற்ற கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
நாளை கோட்டையில் நடைபெறும் விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இக்கல்லூரிகளை முதல்வர் தொடங்கி வைப்பார்.












Click it and Unblock the Notifications