டீசல் விலை குறைப்பு கெடு முடிந்தது: லாரி ஸ்ட்ரைக் தேதி இன்று அறிவிப்பு!
சென்னை: டீசல் விலை குறைப்புக்காக லாரி உரிமையாளர்கள் விதித்திருந்த கெடு முடிந்ததால், இன்று காலவரையற்ற லாரி ஸ்ட்ரைக்குக்கான தேதியை அறிவிக்கிறார்கள்.
மத்திய அரசு கடந்த மாதம் 24-ந் தேதி டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. இந்த விலை உயர்வுக்கு எதிர்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆங்காங்கே விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசும், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் டீசல் விலை உயர்வை ரத்து செய்யாவிட்டால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்து இருந்தன.
காலக்கெடு முடிந்தது
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் மற்றும் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் டீசல் விலை உயர்வு, கூடுதல் சுங்க கட்டணம் வசூல், இன்சூரன்சு கட்டணம் அதிகரிப்பு, டயர் விலை உயர்வு உள்ளிட்ட லாரி தொழிலை பாதிக்கும் அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
லாரி ஸ்டிரைக் எப்போது?
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில், "டீசல் விலையை குறைக்க கோரி நாங்கள் மத்திய அரசுக்கு கொடுத்த காலஅவகாசம் முடிந்து விட்டது. இதுவரை அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை. டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவும் இல்லை.
எனவே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதித்தோம். குறிப்பாக டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம். இன்று மாலையில் அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ளோம்," என்றார்.












Click it and Unblock the Notifications