சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பின் விவரம்
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு கடந்த ஆண்டே மாணவர்கள் மாறிய நிலையில் மீண்டும் அவர்களை பழைய பாடத் திட்டத்துக்கு இழுத்துச் செல்வது சரியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இன்று சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் பிறப்பித்த உத்தரவு விவரம்:
தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டே அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கு முரணாக தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்ட சட்டத்திருத்தத்தின் 3-ம் பிரிவு செல்லாது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்குரிய நியாயமான காரணங்களை தமிழக அரசு கூறவில்லை.
ஒன்றாம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் ஏனைய வகுப்புகளுக்கும் இதே கல்வி திட்டம் தொடர வேண்டும்.
1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்திய நிலையில் மீண்டும் பழைய பாடத் திட்டத்துக்கு மாணவர்களை இழுத்து செல்வதை அனுமதிக்க முடியாது. இது ஒரு கோடியே 38 லட்சம் மாணவ-மாணவியர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். எனவே இந்த ஆண்டே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கான சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களை இந்த மாதம் (ஜூலை) 22-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு பரிந்துரைப்படி ஏதேனும் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணை பட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications