தமிழகத்தில் காங்கிரஸை சிங்கிள் டிஜிட்டுக்குக் கொண்டு வந்து விட்டார் தங்கபாலு- ப.சி கோஷ்டி தாக்கு
சென்னை: தனது சுயலாபத்திற்காக காங்கிரஸ் தலைமை, தேர்தல் ஆணையம், காங்கிரஸ் தொண்டர்கள் என அனைவரையும் ஏமாற்றி விட்டார் தங்கபாலு. அவரது செயலால் இன்று ஒற்றை இலக்கத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் வெல்லும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.ஏ.வடிவேலு.
காங்கிரஸ் சீரமைப்புக் குழு அமைப்பாளராக உள்ள வடிவேலு ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர். நேற்று சென்னையில் இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த தங்கபாலு, தேர்தல் நேரத்தில் சுயலாபத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றியுள்ளார். அதன் மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக காங்கிரஸை தோல்வியின் விளிம்பிற்கு கொண்டு சென்றார்.
பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தோற்றதோடு அன்றி காங்கிரஸை ஒன்றை இலக்க எண்ணிக்கைக்கு கொண்டு வந்தார். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் மேலிட பார்வையாளரான குலாம் நபி ஆசாத்தும் காரணம்.
தேர்தல் முடிந்தவுடன் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழக மக்களிடம் ஊடகங்கள் மூலமாக அறிவித்து தனது ராஜினாமாவை கொடுக்காமல் தமிழக மக்களிடம் ஏமாற்று நாடகமாடினார். இதன்மூலம் தமிழக காங்கிரஸை தமிழக மக்களிடம் அன்னியப்படுத்தியுள்ளார். அவர் ராஜினாமா செய்வதற்காக போராடிய காங்கிரஸ் சீரமைப்பு குழு, தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தேர்வு முறையில் புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வு பட்டியலை அகில இந்திய தலைமைக்கு அனுப்ப உள்ளது.
ஆகஸ்ட் 9ம் தேதி கூடவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications