முல்லா ஒமர் இறக்கவில்லை: ஆப்கான் தாலிபான் தகவல்

தாலிபான் தலவைர் முல்லா ஒமர் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி சேனல் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் முல்லா ஒமர் உயிருடன் இருப்பதாக தாலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.
செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியதாவது,
அமெரி்க்கர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கள் தொலைபேசியை ஒட்டுக் கேட்கின்றனர். அவர்கள் தான் முல்லா ஒமர் இறந்துவிட்டார் என்று செய்தி கொடுத்தனர் என்றார்.
இன்னொரு செய்தித் தொடர்பாளரான காரி யூசுப் அகமதி கூறுகையில்,
எங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகின்றது. முல்லா ஒமர் இறந்துவிட்டார் என்பது பொய்யான செய்தி. அவர்கள் ஆப்கானிஸ்தான் மக்களை ஏமாற்றவே இந்த பொய்யைக் கூறியுள்ளனர். முல்லா ஒமர் உயிருடன் தான் இருக்கிறார் என்றார்.
முல்லா முகம்மது ஒமர் என்கிற முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவன். தலிபான் இயக்கத்தின் மதத் தலைவராகவும் இவன் செயல்பட்டு வந்தான்.
ஆப்கானிஸ்தானை முன்பு தலிபான் அமைப்பு ஆட்சி புரிந்தபோது இவன்தான் ஆப்கானிஸ்தானின் தலைவராக செயல்பட்டான். பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததும் ஆப்கானிஸ்தானை விட்டு தலைமறைவானான்.
ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலுமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான். வடக்கு வசிரிஸ்தான், குவெட்டா ஆகிய பகுதிகளில்தான் இவன் நடமாடி வந்தான்.
2001ல் நடந்த நியூயார்க் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனுக்கும் பிற அல் கொய்தா தலைவர்களுக்கும் முல்லா ஒமர்தான் அடைக்கலம் கொடுத்து காத்து வந்தான். இதனால் முல்லா ஒமரையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன.
சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்ற நிலையில், முல்லா ஒமரும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதை தற்போது ஆப்கான் தாலிபான் அமைப்பு மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications