சமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

மேலும் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்தது. நடப்பு ஆண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்தது.
அந்த மனுவில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 26-ம் தேதி நடக்கிறது.












Click it and Unblock the Notifications