மதுரை பொட்டு சுரேஷ் வீட்டில் ரெய்ட் நடத்திய இணை கமிஷனர் டிரான்ஸ்பர்!

5 போலீஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகர இணை போலீஸ் கமிஷனர் (சட்டம்- ஒழுங்கு) செந்தில்குமார், கோவை நகர துணை போலீஸ் கமிஷனராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்தியபிரியா, சேலம் நகர துணை போலீஸ் கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை (போச்சம்பள்ளி) கமாண்டர் ஆர்.திருநாவுக்கரசு, மதுரை மாநகர இணை போலீஸ் கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு துரைராஜ், சிறப்பு பிரிவு சி.ஐ.டி.யின் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு போலீஸ் சூப்பிரண்டான சம்பத்குமார், சென்னையில் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி. பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொட்டு சுரேஷின் வீட்டில் செந்தில்குமார் டீம் சோதனை நடத்தியபோது பாஸ்போர்ட் மற்றும் பேன் கார்டை தவிர வேறு எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.
ஆவணங்கள் எதுவும் சிக்காததால், மேலிடத்தின் கோபப்பார்வை இணை கமிஷனர் மீது பாய்ந்துள்ளது. இதனால் தான் அவர் அதிரடியாக கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் அவருக்குப் பதிலாக மதுரை போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கர், சென்னையில் அமைச்சர் செந்தமிழனின் ஆதரவாளர்களை கைது செய்த பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.
மதுரை கமிஷ்னரும் மாற்றம்?:
இதற்கிடையே மதுரை நகர போலீஸ் கமிஷனராக உள்ள கண்ணப்பனும் இடமாற்றம் செய்யப்படலாம் என்கிறார்கள். கட்சி சார்பு இல்லாத, நேர்மையான, அதிரடி அதிகாரியான இவர், திமுகவினர் மீது புகார்கள் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுத்தவர்.
அதே போல இப்போது நிலமோசடி புகாரில் அதிமுக எம்எல்ஏ கருப்பையா மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதால், இவரை இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவருக்குப் பதிலாக சைலேந்திர பாபு கமிஷ்னராக நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications