எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம்- அமர்சிங்கிடம் டெல்லி போலீஸ் விசாரணை

கடந்த 2008ம் ஆண்டு, ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோரினார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு தங்களுக்கு லஞ்சம் தர முயற்சி நடந்ததாக கூறி பாஜகவைச் சேர்ந்த எம்.பிக்கள் பணக் கட்டுக்களை சபாநாயகர் இருக்கை முன்பு கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. ஆனால் ஆமையை விட படு நிதானமாக இந்த வழக்கின் வேகம் இருந்தது. இதைக் கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், டெல்லி காவல்துறையை ஒரு பிடி பிடித்தது.
இதையடுத்து திடீரென சுறுசுறுப்பான டெல்லி காவல்துறை, அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்ஸேனா மற்றும் சுஹைல் இந்துஸ்தானி ஆகியோரை கைது செய்தது.
அவர்கள் போலீஸ் விசாரணையின்போது அமர்சிங்தான் தங்களுக்குப் பணம் கொடுத்ததாக புட்டுப் புட்டு வைத்தனர்.
இதையடுத்து அமர்சிங்கிடம் விசாரணை நடத்தவும் தீர்மானித்த காவல்துறை, உள்துறை அமைச்சகத்திடம் அனுமதியும் கோரியது. இதற்கான அனுமதி கிடைத்ததும், இன்று அவரை விசாரணைக்கு அழைத்தது டெல்லி காவல்துறை.
இதையடுத்து இன்று டெல்லி குற்றப் பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு வந்தார் அமர்சிங். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமர் சிங் முன்பு, சுஹைல் இந்துஸ்தானி மற்றும் சக்ஸேனா இருவரையும் நேரில் வைத்து விசாரணை நடத்தவும் டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அமர்சிங்கிடம் கேட்பதற்காக 12 கேள்விகளையும் டெல்லி போலீஸார் தயாரித்து வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications