நில அபகரிப்பு-இன்னொரு திருச்சி திமுக பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சி: தமிழகம் முழுவதும் நில மோசடி, நில அபகரிப்பு தொடர்பாக திமுகவினர் பலர் மீதும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 175 வழக்குகளும், புறநகர் மாவட்டத்தில் 104, வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் தி.மு.க. மாவட்டத் துணை செயலாளர் குடமுருட்டி சேகர், மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் மதிவாணன், திருச்சி மாநகராட்சி, கோ.அபிசேகபுரம், கோட்ட தலைவர் அறிவுடைநம்பி, தி.மு.க. பிரமுகர் கே.கே.எம்.மூர்த்தி, காஜாமலை பகுதி தி.மு.க. செயலாளர் காஜாமலை விஜய் ஆகியோரும் அடக்கம்.
இதில் மதிவாணனும் அறிவுடைநம்பியும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் உள்ளனர்.
இந் நிலையில் சிறையில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. முதலில் குடமுருட்டி சேகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் நேற்று காஜாமலை விஜய்யையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து உத்தரவிட்டார்.
காஜாமலை விஜய் மீது 2010ல் கே.கே.நகரில் இடப்பிரச்சனை மோதல் வழக்கு, விமான நிலைய போலீஸ் நிலையத்தில் வழக்கு, 2011ல் இடப்பிரச்சனை தொடர்பாக டெலிபோன் பூத்தை அடித்து நொறுக்கி மிரட்டிய வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளன.
தி.மு.க. பிரமுகர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருவதால் திருச்சி மாவட்ட தி.மு.க. பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்கள் மீதான புகார்களில் முன்பு யாரை மிரட்டினார்களோ, அவர்களிடமே சரண்டராகி, சமரசமாகப் போய்விடலாம் என கெஞ்ச ஆரம்பித்துள்ளனர்.
2 முறை குண்டர் சட்டத்தில் கைதான 4 பேர் மீது மீண்டும் 'குண்டாஸ்':
இந் நிலையில் சென்னையில் ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் கைதான 4 ரவுடிகள் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பீர்க்கங்கரணை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசன் (35). கடந்த 10ம் தேதி இவரை 4 பேர் கும்பல் கத்தியை காட்டி பணம், கைகடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் நெற்குன்றம் சூர்யா (24), பெருங்களத்தூர் கஜா (24), ஊரப்பாக்கம் சைலு (34), குரோம்பேட்டை மதுரை கார்த்தி (35) ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் சந்தானபுரம் அருகே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் இந்த 4 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற 20க்கும் மேற்பட்ட வழக்குகள் கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, பீர்க் கங்கரணை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் உள்ளன என்பதும் ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து புறநகர் போலீஸ் கமிஷனர் கரன் சின்கா உத்தரவுப்படி நால்வரும் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications