தீபாவளி பண்டிகை: ரயில் முன்பதிவு 24-ம் தேதி துவக்கம்
நாகர்கோவில்: தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக வரும் 24-ம் தேதி ரயில் முன்பதிவு துவங்குகிறது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் முன்பதிவு செய்ய பலரும் முன்கூட்டியே தயாராவது வழக்கம். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்களில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும்.
தீபாவளிக்கு முன்னதாக வருகின்ற சனி, ஞாயிறு விடுமுறை நாட்களையும் கருத்தில் கொண்டு அக்டோபர் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்படுகிறவர்கள் வரும் 24-ம் தேதியில் இருந்து முன்பதிவு செய்யலாம். இதனால் வரும் நாட்களில் டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகம் இல்லை.
விரைவில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி இயக்கப்படும்:
இந் நிலையில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில், தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷன் தெரிவித்தார்.
திருச்சி ரயில் நிலையத்தில் வியப்பூட்டும் தென் இந்திய ரயில்வே' எனும் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் புத்தகத்தை வெளியிட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷன் கூறியதாவது: சர்வதேச அளவில் மலை ரயில் என்ஜினை தயாரிக்க, 25 கோடி ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் நமது என்ஜினீயர்கள், 3 கோடி ரூபாய் செலவில் திருச்சி பொன்மலை பணிமனையில் நீலகிரி மலை ரயிலுக்கு ஒரு என்ஜின் தயாரித்து அனுப்பியுள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் 200 தடவை இயக்கப்பட்டதால், இந்த என்ஜினில் பல முறை கோளாறு ஏற்பட்டுள்ளது. தற்போது கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வழியில் எங்கும் நிற்காமல் இயக்க, முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
போதுமான பெட்டி வசதி இல்லாததால், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயிலை தினமும் இயக்கப்பட முடியவில்லை. இந்த ஆண்டுக்குள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications