அழகிரியின் தென் மண்டல பொறுப்பாளர் பதவியை ஒழித்துக் கட்ட ஸ்டாலின் ஆதரவாளர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வகித்து வரும் தென் மண்டலப் பொறுப்பாளர் பதவியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று திமுக தலைமைக்கு ஸ்டாலினின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூரில் நடந்து வரும் திமுக செயற்குழு- பொதுக் குழுக் கூட்டம் ஸ்டாலின்-அழகிரி மோதலுக்கான கூட்டமாக மாறிவிட்டது. கட்சியின் செயல் தலைவராக முயலும் ஸ்டாலின், தனது ஆதரவாளர்கள் மூலம் அதற்கான முயற்சிகளைச் செய்ய, அதைத் தடுக்க அழகிரி தனது ஆதரவாளர்களைக் களமிறக்கியுள்ளார்.

ஸ்டாலினுக்கு ஆதரவாக கட்சியின் சில மூத்த தலைவர்களும் வட, மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் பேச, அழகிரிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் குரல் கொடுத்தனர்.

இதனால் நேற்றைய செயற்குழுக் கூட்டத்திலும் அதற்கு முன் நடந்த மூத்த தலைவர்கள் கூட்டத்திலும் அனல் பறந்தது. தலைவர் பதவியைப் பிடிக்க ஸ்டாலின் அவசரப்படுவதாக கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்களே கருதுவதாகத் தெரிகிறது.

இந் நிலையில், தென் மண்டலப் பொறுப்பாளர் என்று ஒரு பதவியே தேவையில்லை என்று கூறி திமுக தலைமைக்கு ஸ்டாலினின் ஆதரவாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதங்களை அனுப்பியவர்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்று தெரிகிறது.

திமுக உயர் மட்டக் கமிட்டி உறுப்பினரும் ஸ்டாலினின் ஆதரவாளருமான ஜி.என்.ஷா எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் கருணாநிதிக்கும், அழகிரிக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. இதனால், கட்சியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. தென் மாவட்டக் கட்சியினர் ஒவ்வொரு கட்சிப் பணிக்கும், அண்ணா அறிவாலயத்திலும் அழகிரியிடமும் அனுமதி வாங்க வேண்டியுள்ளது.

தென் மாவட்டத்தைத் தவிர கட்சியில் வேறு மண்டலங்களுக்கு என அப்படிப்பட்ட ஒரு பதவியே இல்லை. இதனால், தென் மண்டலப் பொறுப்பாளர் என்ற பதவியும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதே போன்ற கடிதத்தை தென் மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 10 உயர் மட்டக் கமிட்டி உறுப்பினர்களும் கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

ஒரே ஹோட்டலில் கருணாநிதி-அழகிரி, மற்றொன்றில் ஸ்டாலின்:

இந் நிலையில் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தங்கினர்.

ரெசிடென்சி ஹோட்டலின் 8வது மாடி அறையில் கருணாநிதியும், 6-வது மாடி அறையில் மு.க. அழகிரியும் தங்கியுள்ளனர்.

ஆனால், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அங்கு தங்காமல் கோவை விமான நிலையம் அருகேயுள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை வெளியேறச் சொன்ன ஸ்டாலின்:

இந் நிலையில் திமுக செயற்குழு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும், போட்டோ கிராபர்களையும் வெளியேறுமாறு கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

செய்தி சேகரிக்க செய்ய பல்வேறு வட நாட்டு செய்தி சேனல்கள், தமிழ் தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ் செய்தியாளர்கள் என பலர் கோவை வந்திருந்தனர்.

திமுக செயற்குழு கூட்டம் குறித்து செய்தியை சேகரிக்க புகைப்பட நிபுணர்கள் கூட்ட அரங்கிற்குள் செல்ல முயன்றனர். அவர்களை திமுக நிர்வாகிகள் சிலர் தடுத்தனர். இதில் சிலர் அவசர அவசரமாக புகைப்படம் எடுத்தனர். சிலர் புகைப்படம் எடுக்க முடியாமல் திணறினர்.

இந்த நிலையில் கூட்டத்தின் மேடையில் இருந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் புகைப்படக்காரர்களை இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து திமுக நிர்வாகிகளால் புகைப்படக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

எப்பொழுதும் பத்திரிக்கையாளர்களுடன் இணக்கமாக இருக்கும் திமுக தலைமை இம்முறை இவ்வாறு நடந்து கொண்டது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+