நில அபகரிப்பு: சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பையா தலைமறைவு
மதுரை: சென்னையைச் சேர்ந்த பெண் மீனாம்பாளுக்கு சொந்தமான 2.20 ஏக்கர் நிலத்தை மோசடியாக அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பையா மீது புகார் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
என் தாயார் மீனாம்பாள் பெயரில் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடைமருதூரில் 2.20 ஏக்கர் நிலம் வாங்கினோம்.
அதை விற்பதற்காக வில்லங்கம் போட்டு பார்த்தபோது கடந்த 2003-ம் ஆண்டே சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பையாவின் உறவினரான வாவிடமருதூரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் ஏஜென்ட்டாக இருந்து, மதுரை கிருஷ்ணாபுரம் காலனி கண்ணன் மற்றும் திருமங்கலம் ஜெயச்சந்திரனுக்கு தலா 45 சென்ட் விற்றுள்ளது தெரிய வந்தது.
இத்தனை ஆண்டுகளாக அந்த இடத்தை சின்னம்மாள் என்பவர் தான் பார்த்து வந்தார். அவரை மிரட்டி கைரேகை எடுத்து போலி ஆவணம் தயாரித்துள்ளனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்துமாறு கூடுதல் டி.எஸ்.பி. மயில் வாகணனுக்கு மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
இந்த புகாரின்பேரில் கருப்பையா எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழன், சடாச்சரம் என்னும் 2 தலையாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. கருப்பையாவிடம் விசாரிக்க சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications