ஊட்டியில் பயிற்சி ரத்து: திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை வீரர்கள்
ஊட்டி: ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் 25 இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படவிருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் கொழும்புவுக்கு திரும்பிச் சென்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி்க் கழகத்தில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாக செய்திகள் வந்தன. இலங்கை வீரர்கள் குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இது பற்றிய தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதயைடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை குன்னூர் லெவல் கிராசிங் மற்றும் ஊட்டி-குன்னூர் ரோட்டில் உள்ள பிளாக்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர்.
போராட்டம் நடத்த முயன்ற 220 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் பலதத் பாதுகாப்பு போடப்பட்டது.
இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பயிற்சி அளிப்பதா என்று பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இதனால் இலங்கை ராணுவத்தினருக்கு மைசூரில் பயி்ற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கும் எதிர்ப்பு கிளம்பலாம் என்ற அச்சம் பரவியதையடுத்து, நேற்று காலை 7.15 மணிக்கு இலங்கை ராணுவத்தினர் குன்னூரில் இருந்து பேருந்து மூலமாக பெங்களூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications