சென்னை ரயிலில் பெண்ணிடம் கொள்ளை: கொல்கத்தாவில் ஆந்திர வாலிபர் கைது
சென்னை: சென்னை ரயிலில் மயக்க மருந்து கலந்து பெண்ணிடம் கொள்ளை அடித்த ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர் கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மந்தைவெளியை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை எஸ்ஐ விஜிஆர் ரெட்டியின் மனைவி சுதா ராணி தனது ஒரு வயது குழந்தை, தந்தை, தங்கையுடன் விசாகப்பட்டிணத்தில் இருந்து சென்னை செல்ல கொல்கத்தாவில் இருந்து வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார்.
முன்பதிவு பெட்டியில் இவர்களுக்கு தனித்தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அப்போது இவர்களது பெட்டியில் அமர்ந்திருந்த வாலிபரிடம் தனித்தனியாக இருக்கை உள்ளது, எனவே சீட் மாற்றி கொள்ளலாமா என்று சுதா ராணியின் தந்தை கேட்டார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார்.
அப்போது சூட்கேஸ், பேக் ஆகியவற்றை இடமாற்றம் செய்தனர். அப்போது சுதாராணி குடும்பத்தார் உணவில் அந்த வாலிபர் மயக்க மருந்தை கலந்தார்.
இதை உண்ட சாப்பிட்ட சுதாராணி, அவரது தந்தை, தங்கை ஆகியோர் மயங்கினர். இதையடுத்து சுதாராணியிடம் இருந்த 17 பவுன் நகைகள் இருந்த பையை எடுத்துக் கொண்டு அந்த வாலிபர் தப்பிவிட்டார்.
இது குறித்து சுதாராணி தந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஒரு கேட்பாரற்ற பை கிடந்தது. அதில் சுதாராணியின் அடையாள அட்டை இருந்தது. இதையடுத்து விமான நிலைய போலீசார் சுதாராணியை தொடர்பு கொண்டு பேசியபோது, தன்னிடம் வாலிபர் கொள்ளையடித்த விவரத்தைத் தெரிவித்தார். நகைகளுடன் அடையாள அட்டை இருந்த பையை வாலிபர் கொள்ளையடித்ததைக் கூறினார்.
இதையடுத்து விமான நிலைய கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வாலிபரை சுதாராணி அடையாளம் காட்டினார். அந்த வாலிபர் கொல்கத்தா விமானத்தில் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையம் வந்திறங்கிய அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது பெயர் வெங்கட் என்றும் விஜயவாடாவை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட வாலிபர் மீது ஆந்திராவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவர் ஆந்திர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications