உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தனித் தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

வடக்கு மாநிலத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இலங்கை படையினர் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்- ஆளும் கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது.

இவற்றையெல்லாம் மீறி வடக்கு மாநிலத்தில் மொத்தமள்ள 20 உள்ளாட்சி அமைப்புகளில் 18 இடங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, பதிவான வாக்குகளில் 75 விழுக்காட்டிற்கும் அதிக வாக்குகளை அக்கூட்டமைப்பு பெற்றுள்ளது.

இதன்மூலம் ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையும், தங்களுக்கென தனித் தமிழ் தலைமை தேவை என்பதையும் ஈழத்தமிழர்கள் உணர்த்தியிருக்கின்றனர். இதை தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான கருத்து கணிப்பு முடிவாகவே உலக நாடுகள் கருத வேண்டும்.

இலங்கையில் சிங்களர்கள் வாழும் பகுதிகளை பொறுத்தவரை தமிழர்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ராஜபக்சே கட்சிதான் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை உணர்ந்து, தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்து, தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஈழத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகியவற்றிற்கு அடுத்தப்படியாக உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க ஐ.நா. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஓமனில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்:

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், கொரியா நாட்டுக்குச் சொந்தமான ஓஷன் ஸ்டார் என்ற கப்பல் பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து ஓமனுக்கு அரிசி ஏற்றிச் சென்றபோது, ஓமன் கடல் பகுதியில் புயலில் சிக்கி கடந்த மாதம் 26ஆம் தேதி மூழ்கிவிட்டது.

அக்கப்பலில் இருந்த 10 பணியாளர்களில் 4 பேர் கடலில் குதித்து தப்ப முயன்றபோது அவர்களை துபாய் நாட்டுக் கப்பல் மீட்டது. அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர்.

மீதமுள்ள 6 பேரையும் ஓமன் நாட்டுக் கடற்படையினர் மீட்டு தங்களது காவலில் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கனராஜ் சேவியர், ஸ்ரீதர் சகாய ராஜ் ஆகிய இருவர் உள்ளிட்ட 4 இந்தியர்களும் அடக்கம்.

கடந்த 10 நாட்களாக ஓமன் நாட்டு கடற்படையினரின் காவலில் உள்ள அவர்களை மீட்டுத்தரும்படி உறவினர்கள் முறையீடு செய்தும், இன்றுவரை அவர்ள் மீட்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசும், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும் தலையிட்டு ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 4 இந்தியர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

பொன்னாடைக்கு பதில் குழந்தைகளுக்கு துணி வாங்கி கொடுங்கள்-ராமதாஸ்:

எனக்கு பொன்னாடை அணிவிப்பதற்கு பதில் உங்கள் குழந்தைகளுக்கு துணிமணி வாங்கிக் கொடுங்கள் என்று தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுரை கூறினார்.

சென்னையில் பாமக சார்பில் அரசியல் கட்சிகளும், தேர்தல் செலவுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய ராமதாஸ், மேலோட்டமாக பார்த்தால் தேர்தலில் செலவு எதுவும் இல்லை என்று தோன்றும். ஆனால் வாக்குச்சாவடி செலவு என்பது மூன்று கட்டமாக செலவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை ஒவ்வொரு கட்சியிலும் செலவு செய்கின்றனர். பல்வேறு செலவுகளுக்கு பணம் தராவிட்டால் வேலை செய்ய முடியாது என்ற சூழ்நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

தேர்தல் வந்துவிட்டாலே, அந்த திருவிழாவில் டாஸ்மாக் கடைகளில் இருந்து, பிரியாணி கடைகள் வரை பணம் கொழிக்கிறது. தேர்தல் செலவு என்ற பெயரில் கறுப்பு பணப்புழக்கம் அதிகமாகிவிட்டது.

ஒரு இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் வரையும், இன்னொரு இடைத்தேர்தலில் ரூ.10 ஆயிரம் வரையும் பணம் கொடுத்தார்கள். பென்னாகரம் இடைத்தேர்தலில் ரூ.75 கோடி வரை செலவு செய்தார்கள். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது?.

1962ல் காஞ்சீபுரம் தேர்தலில் தோல்வி அடைந்த அண்ணா, காங்கிரசார் பணத்தினால் தன்னை தோற்கடித்தார்கள் என்றார். காங்கிரசை குறை கூறிய திராவிட இயக்கங்கள் எதிர்காலத்தில் அதனை மாற்றிக் காட்டினார்களா என்றால் இல்லை.

தேர்தலில் செலவுகள் என்பது இனி இருக்கக்கூடாது. இனி நாங்கள் கட்சியினருக்கு வாக்குச்சாவடி செலவு கொடுக்கப் போவதில்லை என்று எல்லா அரசியல் கட்சிகளும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த பிரகடனத்தை உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் செய்து காட்டுவோம். இனி வருகின்ற தேர்தலில் ஆடம்பர மேடைகள் கூடாது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையமே பிரசார செலவை செய்ய வேண்டும். பின்னர் அந்த கட்சிகளிடமிருந்து அந்த செலவை திரும்ப பெறலாம். தேர்தல் செலவுகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றார்.

விழாவில் ராமதாசுக்கு ஏராளமான தொண்டர்கள் பொன்னாடை அணிவிக்க வந்தனர். அவற்றை ஏற்க மறுத்த டாக்டர் ராமதாஸ், இந்த பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்குங்கள். அதுவும் இல்லாவிட்டால் கைகொடுத்து வாழ்த்துங்கள், அதுபோதும். இந்தப் பொன்னாடைக்கு பதிலாக உங்கள் குழந்தைகளுக்கு துணிமணிகளை வாங்கித் தாருங்கள். இனி பொன்னாடை அணிவிக்க வேண்டாம், வெடி வெடிக்கவும் வேண்டாம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+