குற்றப்பிரிவு போலீஸ் முன் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜர்-சேலத்தில் பெரும் பதற்றம்

2 நில அபகரிப்பு புகார்களில் சிக்கியுள்ள வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த 2 வழக்குகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு சரணடைய வேண்டும் என்று நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ஆறுமுகம் இன்று காலை சேலம் டவுனில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக கோவையில் நடந்த தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து சரணடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை தொடங்கியது.
அங்கு, ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக குற்றப் பிரிவு அலுவலகம் அமைந்துள்ள பஜார் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 9.30 மணி வரை அந்த வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது. 9.30 மணிக்கு மேல் கன்னிகாபரமேசுவரி கோவிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை போலீசார் போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். அம்மாபேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் பொன்னம்மாபேட்டை, அணைமேடு வழியாக திருப்பி விடப்பட்டன.
வீரபாண்டி ஆறுமுகத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவர் தொடர்ந்து 3 தினங்கள் போலீஸ் காவலிலேயே இருப்பார்.
அவரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிச்சை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். விசாரணை விவரங்களை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வர்.
6 மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல்நிலையைப் பரிசோதித்து சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ. 25,000 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள வீடுகள், சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரிமியர் ரோலர் மாவு மில்லின் நிலம் ஆகியவற்றை ஆக்கிரமித்ததாக ஆறுமுகம் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 வழக்குகளிலும் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications