சமச்சீர் கல்வி கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்: மாணவர்களுக்கு திமுக அழைப்பு

திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை எப்படியும் எப்பாடுபட்டாவது எத்தகைய நீதிமன்றங்களில் ஏறியும் தடுத்து நிறுத்துவது என்ற முனைப்போடு தனியார் பள்ளி முதலாளிகளும், அதற்கு துணை போகும் தமிழக அரசும் மிகுந்த அக்கறையோடு உயர்நிலை வழக்கறிஞர்கள் துணையுடன் வாதாடி, போராடி தமிழக மாணவர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஆட்டமாடி கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் ஆட்டத்தைத் தடுக்கவும் அநீதியை வென்று அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் கடமைப்பட்டுள்ள தமிழகத்தின் கட்சிகள் பல்வேறு தலைவர்களின் ஏகோபித்த குரலோடு திமுகவின் குரலும் இணைந்திருப்பதால், திமுகவினர் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் பல்வேறு அணிகளின் சார்பாக வரும் 29ம் தேதி சமச்சீர் கல்வி ஆதரவுக்கு வலுசேர்க்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் மாணவர்கள் ஆசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும். பெற்றோர்கள் வேலைக்கு செல்லாமல் ஒத்துழைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறிதும் வன்முறைக்கு இடமின்றி, அமைதியான முறையில் அறவழியில் சமச்சீர் கல்வி கோரிக்கையை வலியுறுத்தி, அறப்போர் கிளர்ச்சி நடைபெற வேண்டுமென்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 ஜெயலலிதா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது:
இந்த ஜெயலலிதா மட்டுமல்ல இன்னும் ஆயிரம் ஜெயலலிதா சேர்ந்து வந்தாலும் திமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று திமுக ராஜ்யசபா எம்.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவை அழித்து ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தில், அரசு செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதா, திமுகவை, அழிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் நினைப்பது நிச்சயம் நடக்காது.
வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்யும் நோக்கில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை சந்திக்கத் திமுக தயார். அவர் மீதான குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட உண்மையில்லை.
அரசியல் தூண்டுதலின் பெயரில் வேண்டும் என்றே வழக்கு போடப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளால், திமுக,வையும், அதன் தலைவர்களையும் அடக்கி அழித்து விட முடியாது.
திமுக,வையும், அதன் தலைவர்களையும் அழித்து விட ஒரு ஜெயலலிதா அல்ல ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது என்றார் ராமலிங்கம்.












Click it and Unblock the Notifications