அழகிரி வலதுகரம் பொட்டு சுரேஷ் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது!
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளியும், திமுக செயற்குழு உறுப்பினருமான சுரேஷ்பாபு என்கிற பொட்டு சுரேஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொட்டு சுரேஷ் மீது நில அபகரிப்பு மோசடி தொடர்பான புகார் வந்ததைத் தொடர்ந்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். திருமங்கலம், வேங்கட சமுத்திரத்தை சேர்ந்த சிவனாண்டி, அவருடைய மனைவி பாப்பா ஆகியோருக்கு சொந்தமான 5.14 ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்டதாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பொட்டுசுரேஷ், மதுரை மாநகர தி.மு.க செயலாளர் தளபதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் கொடிசந்திரசேகர், நகரசெயலாளர் கிருஷ்ணபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,
இந்த வழக்கு தொடர்பாக தி.மு.க. செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார்.கோபி உள்பட 8 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்த நிலையில் சுரேஷ் மீது இன்னொரு புகார் பாய்ந்தது. அண்ணாநகரைச் சேர்ந்த அமர்நாத் என்பவர் ஒரு நில அபகரிப்புப் புகாரைக் கொடுத்தார். அதில், சுரேஷ், திமுக துணைச் செயலாளர் உதயக்குமார், சூடம் மணி, மாணிக்கம், பாலமுருகன், ரவிக்குமார் ஆகியோர் தன்னை மிரட்டி 40 ஏக்கர் நிலத்தைப் பறித்துக் கொண்டதாக கூறியிருந்தார். இதையடுத்து மாணிக்கம் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே சுரேஷ் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புறநகர் மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் பரிந்துரைத்திருந்தார்.
அதை ஏற்று பொட்டு சுரேஷை குண்டர் தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் உத்தரவிட்டார். இதையடுத்து சுரேஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதுதொடர்பான உத்தரவு ஏற்கனவே அவர் அடைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு சுரேஷால் ஜாமீனில் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சுரேஷ், தளபதி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை மதுரை 1வது மாஜிஸ்திரேட் கோர்ட் நிராகரித்தது நினைவிருக்கலாம்.
பொட்டு சுரேஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்:
இந்நிலையில் சாம்பக்குளம் பகுதியில் 40 ஏக்கர் நிலம் மோசடி செய்ததாக பொட்டு சுரேஷ் மீது நேற்று அமர்நாத் என்பவர் புதிய புகார் ஒன்றை அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பொட்டு சுரேஷ் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.












Click it and Unblock the Notifications