2 வருடமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்டு சீரழிக்கப்பட்ட சிறுமி-2 பேர் கைது
ராமநாதபுரம்: மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த இரண்டு வருடமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் கையில் சிக்கி சீரழிந்து மீண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நடந்த சிறுமி பலாத்காரத்தை மிஞ்சும் வகையில் இந்த பரபரப்புச் சம்பவம் அமையும் என்று அஞ்சப்படுகிறது.
மதுரை அருகே உள்ள வாகைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவருக்கு 12 வயதானபோது அவரது பெற்றோர் உறவினரான ராஜ்குமார் என்பவருக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டனர். திருமணம் என்றால் என்ன, தாம்பத்யம் என்றால் என்ன என்று புரியாத வயதில் கல்யாணம் செய்து கொடுத்ததால் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த சிறுமி பாண்டிச்செல்வி குடும்ப வாழ்க்கையை வெறுத்து, வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
பின்னர் திருமங்கலம் வந்த அவர் அங்கு ஒரு ஜவுளிக்கடையி்ல் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சக பெண் ஊழியருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. ஒருமுறை வேலை முடிந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தபோது தனது பர்ஸைக் காணாமல் திடுக்கிட்டார். அப்போது தனது தோழியின் தாயார் அங்கு வந்ததைப் பார்த்து அவரிடம் நடந்ததைக் கூறினார்.
அந்தப் பெண்மணி ஒரு விபச்சார புரோக்கர். பாண்டிச்செல்வியை தனது மகள் போலப் பார்க்காத அந்தப் பேய், அவரை வைத்து காசு பார்க்க முடிவு செய்து நைசாகப் பேசி தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.
பின்னர் இரவு முழுவதும் பாண்டிச்செல்வியிடம் பாலுணர்வைத் தூண்டும் வகையிலும், பணத்தாசையை தூண்டும் வகையிலும் பேசி அவரை தன் சொல்படி கேட்குமாறு மூளைச் சலவை செய்து விட்டார்.
அதன் பின்னர் மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த சத்யா என்பவரிடம் பணத்திற்கு பாண்டிச்செல்வியை விற்றார். அவர் பாண்டிச்செல்வியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். அப்போதுதான் தான் விபச்சாரத்தில் தள்ளப்பட்டதை உணர்ந்தார் செல்வி. இருப்பினும் அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை.
இதையடுத்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செல்வியிடம் கை மாறிய சிறுமி பின்னர், மதுரை, காரைக்குடி, சிவகங்கை என பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டு பல்வேறு நபர்களுக்கும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு விபச்சாரக் கும்பலிடமிருந்து தப்பிய பாண்டிச்செல்வி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில், அதன் நிர்வாகி ரைசுதீன் என்பவரிடம் தஞ்சமடைந்தார்.
ரைசுதீன், இதுதொடர்பாக ராமநாதபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் அதை வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, ரைசுதீன் தமிழக டி.ஜி.பி., ராமனுஜத்திடம் போனில் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்தார்.
இதையடுத்து டிஜிபி உத்தரவின் பேரில், ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், சிறுமியிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு நபர்களிடம் சிக்கி, கற்பழிக்கப்பட்டது பற்றி கதறியவாறு சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து, செல்வி, மதுரை சத்யா, சந்திரா, கலைச்செல்வி, காரைக்குடி ருக்மணி, ராமநாதபுரம் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சீனிக்கட்டி மகன் ஷேக், ஆனந்தம், ராமேஸ்வரம் திமுக நகராட்சி தலைவர் ஜலீல், இளங்கோ ஆகியோர் மீது ராமநாதபுரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிறுமியை ராமநாதபுரம் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
2 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வழக்குப் பதிவு செய்யப்பட்ட 14 பேரையும் தேடி போலீஸார் தீவிரமாக முடுக்கி விடப்பட்டனர். இதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பிரமோத் அய்யர் மற்றும் ராஜா முகம்மது ஆகிய இருவர் பிடிபட்டுள்ளனர்.
மற்ற 12 பேரையும் பிடிக்க மதுரை, காரைக்குடி மற்றும் சென்னைக்குப் போலீஸார் விரைந்துள்ளனர்.
கொச்சியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல இந்த சம்பவமும் பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications