வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன்-'அப்ரூவராக' மாறுவாரா இன்ஸ்பெக்டர் லட்சுமணன்?

இரு நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் திங்கள்கிழமை முழுவதும், நேற்றும் விசாரணை நடந்தது. இன்று 3வது நாளாக விசாரணை நடந்தது.
வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸ் காவலில் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கடந்த மூன்று நாட்களாக காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் அவருக்கு இன்று இரு நபர் ஜாமீன் வழங்கி நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டார்.
ரூ. 25,000க்கு இருநபர் ஜாமீன் வழங்கியதை அடுத்து, வீரபாண்டி ஆறுமுகம் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
ஆதரவாளர்கள் கலாட்டா:
முன்னதாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்ட அவர்கள், கற்களைக் கொண்டு நீதிமன்றத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.
'அப்ரூவராக' மாறுவாரா இன்ஸ்பெக்டர் லட்சுமணன்?:
முன்னதாக விசாரணைக்காக சேலம் நகர காவல் நிலைய வளாக்கத்திலேயே வீரபாண்டி ஆறுமுகம் கடந்த இரண்டு நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அங்கு இரவு பகலாக ஏராளமான திமுகவினர் குவிந்திருந்தனர்.
இதனால் காவல் நிலையமே உள் பக்கமாக பூட்டப்பட்டுவிட்டது. காவல் நிலையம் இருக்கும் பெரிய கடை வீதி, இரண்டாவது அக்ரகாரம், சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, பெரும்பாலான கடைகளும் பூட்டப்பட்டிருந்தன.
இந் நிலையில் ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது சேலம் பள்ளபட்டியிலும் பின்னர் கொண்டலாம்பட்டியிலும் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் லட்சுமணன். இவர் மீதும் அங்கம்மாள் நகர் நில மோசடி, பிரீமியர் மில் நில மோசடி உள்பட பல மோசடி வழக்குகள் உள்ளன.
வீரபாண்டி ஆறுமுகத்தை அப்பா என்று கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்த இவர் கட்டைப் பஞ்சாயத்துக்கும் பேர் போனவர். தன்னை விட மூத்த அதிகாரிகளையே மிரட்டி, உருட்டி வந்தார். பல உயர் காவல்துறை அதிகாரிகளை இவர் நினைத்த இடத்துக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
திமுக ஆட்சியில் சேலத்தை ஆட்டுவித்து வந்த இவர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கன்னியாகுமரிக்கு மற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்தப் பணியில் சேராமல் விடுப்பில் சேலத்துக்கே வந்துவிட்டார்.
இதையடுத்து நில மோசடி வழக்குகள் காரணமாக இவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். எந்த நேரமும் கைதாகலாம் என்பதால் தலைமறைவாகிவிட்ட இவர், பெங்களூரில் பதுங்கினார். ஆனால், அங்கு வைத்து இவரை சேலம் காவல்துறையினர் நேற்று கைது செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இவரை வைத்து வீரபாண்டி ஆறுமுகத்தை வசமாக மாட்டிவிட திட்டமிட்டுள்ள அதிமுக அரசு, இவரை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அப்ருவராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீரபாண்டி ஆறுமுகம் முன்பு உட்கார பயந்த அதிகாரி:
இந் நிலையில் விசாரணை அதிகாரியான உதவி ஆணையாளர் பிச்சை, வீரபாண்டி ஆறுமுகத்தின் முன்னால் உட்கார கூட தைரியமில்லாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்துவிட்டு 'உக்காருயா' என்று ஆறுமுகம் கூறிய பிறகு தான் தனது இருக்கையில் உட்காந்தார் என்கிறார்கள் காக்கிகள்.












Click it and Unblock the Notifications