கோவை ரயில் நிலையத்தில் உலா வந்த போலி டி.டி.ஆர். கைது
கோவை: கோவை ரயில் நிலையத்தில் பயணிகளை ஏமாற்றி பணம் வசூலிக்க நின்ற போலி ரயில் டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.
ரயில் நிலையங்களில் டிக்கெட் இல்லாமல் வருபவர்களுக்கு அபாராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளில் டி.டிஆர். எனப்படும் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 8.45 மணிக்கு, கோவை ரயில் நிலையத்தில் நின்ற டிப்-டாப் வாலிபர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதித்து கொண்டிருந்தார்.
அப்போது, ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அதிலிருந்து வந்த பயணிகளிடம், அந்த வாலிபர், டிக்கெட்டுகளை பரிசோதித்தார்.
இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ரயில்வே போலீஸார், அவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் போலீசாரை மிரட்டியுள்ளார். இதையடுத்து, போலீசார் ரயில்வே அதிகாரிகளை அழைத்தனர்.
அவர்கள் வந்த போது, அந்த நபர் ஒரு போலி டிடிஆர் என்பது தெரிய வந்தது. அவரை கைது விசாரித்த போது, தர்மபுரி அடுத்த புதுவளவு கிராமத்தை சேர்ந்த திருப்பதி (28) என்பதும், செலவுக்கு பணம் இல்லாததால் டி.டி.ஆர். போல் நடித்ததும் தெரிந்தது. போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications