ஷோபாவை முதல்வராக்க கோரும் எதியூரப்பா-தனக்கு மாநில பாஜக தலைவர் பதவி கேட்கிறார்!

முதல் நிபந்தனை- எனக்குப் பதிலாக ஷோபா கராந்தலாஜேவை முதல்வராக்க வேண்டும்.
2வது நிபந்தனை- என்னை மாநில பாஜக தலைவராக்க வேண்டும்.
3வது நிபந்தனை- கட்சியை நடத்த எனக்கும் ஆட்சியை நடத்த ஷோபாவுக்கும் முழு சுதந்திரம் தர வேண்டும்.
இந்த 3 நிபந்தனைகளை ஏற்றால் ஆஷாடா மாதம் (கன்னட கேலண்டரில் ஆடி மாதம்) முடிந்தவுடன் பதவி விலகுவேன்.
நிபந்தனைகளை ஏற்காவிட்டால், பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். கட்சியை உடைப்பேன், ஆட்சியை கவிழ்ப்பேன், தனிக் கட்சி தொடங்குவேன் என்று கூறிவிட்டார் எதியூரப்பா.
இதையடுத்து அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பெங்களூர் வந்த பாஜக மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் எந்த வேலையையும் செய்ய முடியாமல் சும்மா உட்கார்ந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக அவர்கள் பாஜக எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், இதில் கலந்து கொள்ள எதியூரப்பா மறுத்துவிட்டார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் வர மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
இதையும் மீறி கூட்டத்தை நடத்தினால், பாஜகவில் பிளவு ஏற்பட்டுவிட்டது வெளிப்படையாகவே தெரிந்துவிடும் என்பதால் அந்தக் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார் ஜேட்லி.
புதிய முதல்வராக எதியூரப்பா பரிந்துரைக்கும் ஷோபா அவரது தீவிர ஆதரவாளராவார். ஆனால், ஷோபாவுக்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் பல மூத்த பாஜக தலைவர்களுக்கும் ஆகாது. இதனால், அவரை முதல்வராக்க அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் தன்னை முதல்வராக்குமாறு பாஜக மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பா, முன்னாள் தலைவர் சதானந்த கெளடா, அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டார், அசோக், எம்.பி அனந்த் குமார், முன்னாள் பெங்களூர் மேயர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கட்சித் தலைமைக்கு நெருக்கடி தந்து வருகின்றனர்.
இதில் ஒருவருக்கு ஒருவர் ஆகாது என்ற நிலையில், எல்லோராலும் கொஞ்சமாவது ஜீரணிக்கக் கூடிய ஒரே நபர் சதானந்த கெளடா தான் என்பதால் அவரை 'காம்பரமைஸ் கேன்டிடேட்' ஆக்கி முதல்வராக்க பாஜக தலைவர்கள் முயன்று வருவதாகத் தெரிகிறது.
ஆனால், தனது நிபந்தனைகளுக்கு கட்சி கட்டுப்படாவிட்டால் கட்சியையே உடைக்க எதியூரப்பா தயாராவிட்டார். இதற்காக எம்எல்ஏக்களின் ஆதரவைத் திரட்டும் வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவருக்கு முதலில் 14 எம்எல்ஏக்களின் ஆதரவே இருந்த நிலையில், இப்போது 45 எம்எல்ஏக்கள் வரை அவரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும், 14 எம்பிக்களும் அவரை ஆதரி்ப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக தலைமை கையை பிசைந்து வருகிறது. அதே நேரத்தில் கவர்னர் பரத்வாஜ் மூலமாக குட்டையை மேலும் குழப்ப காங்கிரசும் காத்துக் கொண்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து விசாரித்த கர்நாடக லோக் ஆயுக்தா தனது விரிவான அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தது. அதில், முதல்வர் எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், குமாரசாமி உள்ளிட்டோர் மிகப் பெரிய அளவில் சுரங்க ஊழலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களது இந்த சட்டவிரோத தொழிலால் அரசுக்கு ரூ. 16,000 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும் அது கூறியிருந்தது.
ரெட்டிகளும் பதவியிழக்கிறார்கள்
எதியூரப்பா பதவியை இழந்துள்ளதைத் தொடர்ந்து சட்டவிரோத சுரங்கத் தொழிலின் நாயகர்களான ரெட்டி சகோதரர்களும் பதவிகளை இழக்கிறார்கள். புதிய அமைச்சரவையில் அவர்களுக்கு பதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது.
ஆரம்பத்திலிருந்தே எதியூரப்பாவுக்கு எதிரான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள். இவர்களால் எதியூரப்பாவின் பதவிக்கு முன்பே ஆபத்து வந்தது. ஆனால் அதிலிருந்து தப்பி விட்டார் எதியூரப்பா. இப்போது அவரது பதவிக்கே உலை வைத்து விட்டது சட்டவிரோத சுரங்க ஊழல்.
இந்த நிலையில் ரெட்டி சகோதரர்களும் தங்களது பதவிகளை இழக்கிறார்கள். புதிய அமைச்சரவையில் அவர்களுக்கு கல்தா கொடுக்கப்படுகிறது. ஊழல் கரை படியாத அமைச்சரவையை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications