ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது: பிரகாஷ் காரத்
சென்னை: இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கோரியும், இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சென்னையில் சிறப்பு மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. போர் முடிந்த உடன் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதைத் தான் இலங்கை அரசு முதலில் செய்திருக்க வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கவோ, அதிகாரத்தில் பங்கு அளிக்கவோ இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆர்வம் இல்லை.
போர் முடிந்த பிறகு அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைள் தொடங்கப்படும் என்று ராஜபக்சே தெரிவித்தார். ஆனால் இன்னும் எந்த வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
இனப் பிரச்சனையால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து மக்களின் நலன் காக்க முதலில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டாம். இலங்கை வளர்ச்சி அடைய வேண்டுமெனில் தமிழர்களுக்கு சம உரிமை அளிப்பது மிகவும் அவசியமானது.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டணி நிர்வாகிளுடன் இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்.
அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை ராணுவத்தினர் இடையூறாக உள்ளனர். அரசியல் தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும். 1987-ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி தற்போது தீர்வு காண இயலாது. அதனால் அரசியல் தீர்வு காண புதிய அணுகுமுறைகளோடு இலங்கை அரசு நடவடிக்கைகளைத் துவங்க வேண்டும்.
இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து அதிகாரமிக்க ஒரு சுதந்திர அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
தமிழர் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளைக் படிப்படியாகக் குறைத்து, நெருக்கடி கால சட்டங்களை முற்றிலும் நீக்க வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications