ஒரு திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்-ஸ்டாலின்
மன்னார்குடி : எந்தக் காரணமும் இல்லாமல், சாதாரண திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். உச்சநீதிமன்றம் வரை சென்று நீதி கேட்போம், நியாயம் பெறுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மன்னார்குடியில், திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில்,
திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்வது போல் நாடகமாடி நிகழ்ச்சிகளை திசை திருப்ப அதிமுக முயற்சி செய்துள்ளது.
காரணம் இல்லாமல் சாதாரண தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். அச்சுறுத்தல், சர்வாதிகாரத்தால் திமுகவை அழித்து விட முடியும் என்று ஒருபோதும் கனவு காண வேண்டாம்.
நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கழகத்தை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, கழகம் அழிந்ததாக வரலாறு கிடையாது. திமுக பல்வேறு வெற்றிகளையும், தோல்விகளையும் கண்ட இயக்கம். இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடியதுதான் திமுக.
சமச்சீர்க் கல்வியை அவசர அவசரமாக கொண்டு வரவில்லை. தலை சிறந்த நிபுணர்கள் மற்றும் பலதரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொண்ட பின்னரே கொண்டுவரப்பட்டது.
திமுக கொண்டுவந்த மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முடக்கி வரும் ஜெயலலிதா, அதில் ஒன்றான புதிய தலைமைச் செயலகம் சாதாரண மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு கட்டப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
2006 முதல் 2011 வரையிலான நிலஅபகரிப்பு புகார்களை பெறும் ஜெயலலிதா, 2001 முதல் அவரது ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நிலம் அபகரிக்கப்பட்ட புகார்களை வாங்க மறுத்தது ஏன். திமுகவினர் மீது போடும் புகார்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதேசமயம் பொய் வழக்கு போடுபவர்களையும், தூண்டுபவர்களையும் உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று நியாயம் பெறுவோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 70 கொலைகள், 220 வழிப்பறி கொள்ளைகள் நடந்துள்ளன. திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ள ஜெயலலிதா, இவற்றையெல்லாம் யாருடைய ஆதரவாளர்கள் செய்தது என்று கூறவேண்டாமா என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications