மத வன்முறை தடுப்பு சட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய முதல்வர்களுக்கு ஜெ. கடிதம்
சென்னை: மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள 'மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு' சட்ட மசோதாவை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மசோதாவைத் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
வகுப்புவாத வன்முறையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் இந்த மசோதாவின் வாயிலாக மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவியவும், மத்திய அரசின் தயவில் மாநில அரசுகள் இருக்கும் நிலையும் ஏற்படும். அதோடு மாநில அரசுகள் கலைக்கப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.
இந்த மசோதாவுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
இது தொடர்பாக காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி, அவர்களும் இந்த சட்ட மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.
காங்கிரஸ், திமுகவைத் தவிர பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது பத்திரிக்கைச் செய்தியை அனுப்பியுள்ளேன். இந்த பாசிச சட்ட மசோதாவுக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு வலியுறுத்திள்ளேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயேத் தூக்கி எறிய வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications