பத்மநாப சுவாமி கோவில் அருகே கடை தீப்பிடித்ததில் மர்மம்- விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் தீப்பிடித்தது சதி வேலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டத்தில் மர்மம் உள்ளதாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் கிழக்கு வாசல் அருகே கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. வாடகை பிரச்சனை காரணமாக இந்த கடை கடந்த 3 மாதமாக பூட்டப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டதால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
பத்மநாப சுவாமி கோவில் அருகே நடந்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என முதலில் போலீசார் தெரிவித்தனர். ஆனால் மின் வாரிய அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் அந்த கடைக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என தெரிய வந்தது.
மேலும் ஜெனரேட்டர் மூலமே கடைக்கு மின்சாரம் வழங்கப்பட்டதும் கடை மூடப்பட்ட பின் ஜெனரேட்டரும் இயக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் கடையில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது மர்மமாக உள்ளது. இதற்கிடையே திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் பிரான்சிஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications