காலியாகவுள்ள திருச்சி மேற்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல்?
திருச்சி அமைச்சர் மரியம் பிச்சையின் மறைவால் காலியாகவுள்ள திருச்சி மேற்குத் தொகுதியில் அடுத்த மாதமே இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் மரியம் பிச்சை. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் திருச்சி சென்ற மரியம் பிச்சை, எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்த மே 23ம் தேதி சென்னைக்குக் காரில் புறப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பலம் மிக்க கே.என். நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றதால் மரியம் பிச்சைக்கு அமைச்சர் பதவி கொடுத்து கெளரவித்தார் ஜெயலலிதா. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அதில் நீடிக்க முடியாமல் போய் விட்டது மரியம் பிச்சையால்.
இந்த நிலையில் தற்போது அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. நவம்பர் மாதத்திற்குள் இங்கு இடைத் தேர்தலை நடத்தியாக வேண்டும். இருப்பினும் அதற்கு முன்பே அதாவது அடுத்த மாதமே இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்பட வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தயாராக உள்ளது. பிற தகவல்களும், ஏற்பாடுகளும் கூட தயாராகவே உள்ளன. எனவே அடுத்த மாதமே தேர்தலை நடத்த எந்தவித சிக்கலும் இல்லை என்று தேர்தல் ஆணையத் தரப்பில் கூறப்படுகிறது.
இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications