நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 2780 பேரு்க்கு பட்டா-முதல்வர் வழங்கினார்
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
நெல்லை மாவட்டம், அம்பை வட்டம், சிவந்திபுரம் கிராமம், இனாம் ஓழிப்பு சட்டத்தின்படி 15.4.1965ல் கையகப்படுத்தப்பட்ட கிராமமாகும். இதன்படி அன்றைய நிலையில், நஞ்சை, புஞ்சை, நிலங்களை அனுபவத்தில் வைத்துள்ளவர்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து 1987ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நந்தம் நில அளவை திட்டத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்த 2780 வீடுகளுக்கு நத்தம் மனைவரி தோரயப்பட்டா தயாரிக்கப்பட்டு அதற்கான நில அளவை கணக்குகள் தயார் செய்யப்பட்டது.
அரசின் இந்த நத்தம் நிலவரி திட்ட அளவை தொடர்ந்து பல்வேறு உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்குகள் நடைபெற்றன. அரசுக்கு பாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து 2005ம் ஆண்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் நீண்ட காலமாக தேக்கமடைந்திருந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் தீவிர நடவடிக்கையால் இந்த வழக்கு 10.6.2011, 20.6.2011, 27.6.2011 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 1.7.2011 அன்று அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி நிலவரி திட்ட அளவையில் தயார் செய்யப்பட்ட நத்தம் நிலவரி தூய அடங்கல் பதிவுகள் அனைத்தும் தல ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தல ஆய்வில் மொத்தம் 2780 குடியிருப்பு வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விடுகளில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் உத்தரவி்ட்டார்.
இதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 45 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா பெற போராடி வந்த திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் சிவந்திபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழு குடும்பங்களுக்கு தலைமை செயலகத்தில் வீட்டுமனை பட்டாக்களை நேரில் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.