மாஜி அமைச்சர் என்கேகேபி ராஜா, ஈரோடு மேயர் முருகேஷ் அதிரடி கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக ராமசாமி என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரைப் பதிவு செய்த போலீஸார் நேற்று நள்ளிரவில் கவுந்தம்பாடி சென்றனர். அங்கு தனது வீட்டில் தங்கியிருந்த ராஜாவைக் கைது செய்தனர்.
அதேபோல இதே வழக்கில் ஈரோடு மாநகராட்சி மேயர் முருகேஷும் கவுந்தம்பாடியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யபப்பட்டார். திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதனும் கைதானார்.
கைது செய்யப்பட்ட ராஜா சித்தோடு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். இன்று அவரை போலீஸார் கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது நில அபகரிப்பு மற்றும் ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கினார் ராஜா. இதையடுத்து அவரை அமைச்சர் பதவியிலிருந்தும், திமுகவிலிருந்தும் விலக்கினர். இருப்பினும் சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.