வடிவேலு மீதான குற்றங்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன்: சிங்கமுத்து
காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார். இரும்புலியூர் பகுதியில் ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிங்க முத்து மூலம் வடிவேலு வாங்கி உள்ளார் என்று புகார் தெரிவித்துள்ளார்.
தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று வடிவேலு கூறியுள்ளார். அது மட்டுமின்றி சிங்கமுத்து மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த சிங்கமுத்து கூறியதாவது,
வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார்.
பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது.
அவர் தான் அந்த நில உரிமையாளர் வீட்டுக்கு தினமும் சென்று பேசி குறைந்த விலைக்கு வாங்கினார். இதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் என்னை பலிகடா ஆக்க வடிவேலு முயற்சிக்கிறார்.
அவர் ஒன்றும் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தரவில்லை. நானும், முருகேசன் என்பவரும் தான் அவருக்காக ஒவ்வொரு படக் கம்பெனினுக்கும் நடையாய் நடந்தோம். தற்போது என்னை பொய் வழக்கில் மாட்டிவிட பார்க்கிறார். அவர் மீதான குற்றங்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்றார்.