குற்றாலத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து 7 மாதத்தில் ரூ.14.5 லட்சம் அபராதம் வசூல்
குற்றாலம்: குற்றாலம் பகுதியில் குடிபோதை மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த 7 மாதங்களில் மட்டும் ரூ.14.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்திற்கு ஆண்டுதோரும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் முதல் சீசன் துவங்கியது. மூன்று அல்லது மூன்றரை மாதங்கள் வரை சீசன் நீடிக்கும். கடந்த ஒரு மாத காலமாக சீசன் மிகவும் அருமையாக உள்ளது. இதனால் தினமும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்தின்றி வந்து செல்ல போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குற்றாலம் பேருந்து நிலையம், ஐந்தருவி, இலஞ்சி சவுக்கு முக்கு, நன்னகரம் போலீஸ் சோதனைச்சாவடி, மத்தளம் பாறை, பழைய குற்றாலம் பகுதியில் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாத காலத்தில் குற்றாலம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டியதாக ஆயிரத்து 814 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் 581 பேர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், உரிமம் இன்றி ஓட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து மட்டும் ரூ.14.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் குற்றாலம் பகுதியில் வாகன விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications