போலீஸ் ரெய்டு எதிரொலி- தென் மாவட்டங்களில் கேபிள் டிவிகள் துண்டிப்பு
நெல்லை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் போலீஸார் நடத்திய அதிரடி ரெய்டு மற்றும் தடை நடவடிக்கை காரணமாக ஏராளமான உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள் துண்டிக்கப்பட்டன.
நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று போலீஸார் அதிரடி ரெய்டுகளை நடத்தினர். சன் டிவி நிறுவனத்திற்குச் சொந்தமான கரண் டிவி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர்த் தொலைக்காட்சிகளின் அலுவலகங்களில் இந்த ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுக்குப் பின்னர் அந்தத்தொலைக்காட்சிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் பல முக்கிய உள்ளூர் தொலைக்காட்சிகள் செயல்படவில்லை. இதேபோல மதுரையிலும் பல உள்ளூர்த் தொலைக்காட்சிகள் துண்டிக்கப்பட்டன.
ஒரே ஒரு உள்ளூர்த் தொலைக்காட்சி மட்டும் இயங்கி வருகிறது. அது தமிழின் முன்னணி நாளிதழுக்குச் சொந்தமானதாகும். மற்ற தொலைக்காட்சிகள் எதுவும் இயங்கவில்லை.
தயா டிவி-ராயல் கேபிள் விஷன் அலுவலகத்தில் ரெய்டு
முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்குச் சொந்தமான தயா டிவி மற்றும் ராயல் கேபிள் விஷன் அலுவலகத்தில் நேற்று இரவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையைத் தொடர்ந்து அலுவலகத்தைச் சுற்றிலும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அனுமதியில்லாத சானல்கள் மூடல்:
இந்த நிலையில் சேலத்தில் அனுமதி பெறாமல் நடத்தி வரும் உள்ளூர் கேபிள் டிவி சானல்களை மூட போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆய்வுகளை நடத்திய போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி பெற்றவர்கள் மட்டுமே தொடர்ந்து நடத்தலாம், ஆனால் செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், சேலத்தில் நான்கு கேபிள் சானல்கள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், அவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,நாமக்கல் மாவட்டங்களில் அனுமதி பெறாமல் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய 42 கேபிள் சானல்களுக்கு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications