சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பான ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணம் பாராட்டுக்குரியது-ஜெயந்தி நடராஜன்
சென்னை: தமிழக அரசின் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு தெரிவிக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையை தூய்மையாக ஆக்குவதற்கு ஒரு முயற்சியின் அங்கமாக ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த அணுகுமுறையை வரவேற்கிறேன்.
நான் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சராக இருப்பதால் சுற்றுச்சுழலை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். எனது அமைச்சகமும் இதற்கு முழு ஆதரவை வழங்கும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் நான் ஆராய்ந்து வருகிறேன். எனது அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து வருவதில் இதுவும் ஒன்றாகும். நமது உள்நாட்டு விஷயங்களில் எந்த ஒரு திட்டத்திலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதில் எனக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்பும் கிடையாது.
இந்த துறையில் எனக்கு முன்பு இருந்த ஜெயராம் ரமேஷ் சிறப்பாக பணியாற்றினார். அவரது செயல்பாட்டுக்கும் எனது செயல்பாட்டுக்கும் முரண்பாடு இருப்பதாக கூறுவது சரியல்ல. சுற்றுச்சூழலை பொறுத்தவரை இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது பற்றி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஒற்றுமை உள்ளது. எனவே இதில் பிரச்னை எதுவும் வராது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications