என் குடும்பத்தினரின் சொத்துக்கள் நியாயமாக வாங்கப்பட்டவை- மு.க.அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தாரின் சொத்துக்கள் குறித்த பட்டியல் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியவந்து அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுதொடர்பாக உளவுத்துறை விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
மேலும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களையும் தி அதர் சைட் என்ற ஆங்கில இதழ் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த செய்தியில் வெளியாகியுள்ள தனது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து மு.க.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில் பொய்ச்செய்திகளை வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக என் மனைவி மீதும் என் பிள்ளைகள் மீதும் அவதூறுகளை பரப்பும் வகையில் சமீப காலமாக அந்த பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பொய்ச்செய்திகளை சில ஊடகங்களும் எடுத்து வெளியிடுகின்றன.
என் குடும்பத்தினர் வாங்கியுள்ள எந்த சொத்துக்களும் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வாங்கப்பட்டவைதான். அதற்கு முறையப்படி உரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பத்திரிகைகள் பொய்ச்செய்திகளை வெளியிடுவது உள்நோக்கத்தோடு என் புகழை சீர் குலைக்க நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன்.
இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். ஆகவே இந்த பொய்ச்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications