லண்டனில் தொடரும் பயங்கர கலவரம்: ஏராளமான கடைகள், வாகனங்கள் எரிப்பு

பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள் வசிக்கும் லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள டொட்டன்ஹாம் பகுதியில் முதலில் இந்த வன்முறை பரவியது. 16 வயது சிறுமியை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதாலும், மார்க் டுக்கான் (29) என்ற வாலிபர் மீது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாலும் இந்த வன்முறை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சுமார் 300 பேர் போலீஸ் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் மேலும் பரவியது.
சனிக்கிழமை இரவு போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய கலவரக்காரர்கள், கட்டடங்களுக்கும் வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனர். இதில் ஏராளமான போலீசார் காயமடைந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
இந்தக் கலவரம் நேற்று என்பீல்ட், பிரிக்ஸ்டன், டால்ஸ்டன், இலிங்டன் வால்தம்ஸ்டவ் ஆகிய இடங்களுக்கும் பரவியது. இங்கும் ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஆக்ஸ்போர்ட் சர்க்கசும் தாக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக 160 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications