திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
தூத்துக்குடி: திருச்சி சிறையில் இருக்கும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை 2 பேர் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றனர்.
இந்த வழக்கில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி வெடிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டிவிட்டதால் தான் சசிகுமார் என்னைக் கொல்ல முயன்றார். அதற்கு பழிவாங்கத் தான் அவரைக் கொன்றோம் என்று விசாரணையில் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து குரும்பூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் மாலை அவரைக் கைது செய்தனர். அன்றிரவே அவரை திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் 21-ம் தேதி ஆறுமுகநேரி நகர திமுக அலுவலத்திற்கு தீவைத்தது, அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்தி வரும் டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசியது ஆகிய இரண்டு சம்பவங்களுக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications