ராஜினாமா கடிதத்தை நீதிபதி பி.டி.தினகரன் வாபஸ் பெற முடியாது-சட்ட அமைச்சகம் அறிவிப்பு
டெல்லி: சிக்கிம் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பிய நீதிபதி பி.டி.தினகரன் தற்போது அதை திரும்பப் பெற விரும்புவதாக கூறியுள்ளதை ஏற்க முடியாது என்று சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் தினகரன். பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுக்கு அவரது பெயர் பரிசீலனைக்கு வந்த நிலையில் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு மோசடிப் புகார்கள் அவர் மீது எழுந்தன.
இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் சிக்கிம் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார் தினகரன். சமீபத்தில் அவர் தன் மீதான விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து குடியரசுத் தலைவருக்கு கடந்த 29ம் தேதி கடிதம் அனுப்பினார். அது தற்போது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
இந்த நிலையில் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற விரும்புவதாக கூறி சட்ட அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் தினகரன். ஆனால் அவரால் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற முடியாது என்று சட்ட அமைச்சகம் கூறி விட்டது.
1978ம் ஆண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அளித்த உத்தரவுப்படி, கொடுத்த ராஜினாமா கடிதத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பி.டி.தினகரனின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்று உத்தரவிடுவார் என்பது தெளிவாகியுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் 5ம் தேதியுடன் தினகரன் ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications